Here the proof :
கருப்பாயி என்கிற நூர்ஜஹான்: (நாவல்) திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை நகரத்தின் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் மீனாட்சிபுரம். இக்கிராமத்தில் வாழ்ந்துவந்த தேவந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த 180 குடும்பங்கள் 19.2.1981 அன்றும் 27 குடும்பங்கள் 23.5.1981 அன்றும் இஸ்லாம் மதத்தைத் தழுவின. ஏறத்தாழ 1500 பேர் ஒரு குழுமமாக மதம்மாறிய இந்நிகழ்ச்சி அகில இந்தியாவையும் இக்கிராமத்தின் பக்கம் ஈர்த்தது. இந்துமடாதிபதிகளும், இந்து சமய அடிப்படைவாத இயக்கம் சார்ந்தோரும், அரசியல்வாதிகளும் இக்கிராமத்தை நோக்கி வரத் தொடங்கினர். இது ஒரு படையெடுப்பு போல் அமைந்தது. பெட்ரோடாலர் (அரபு நாடுகளின் பணம்) இம்மதமாற்றத்தின் பின்புலமாக இருந்ததாகப் பேசப்பட்டது. மத்திய உள்துறையின் அமைச்சர் ‘மக்வானா’ இக்கிராமத்திற்கு வந்து ஆராய்ந்து இக்கருத்தை மறுத்ததுடன், தமிழகக் காவல்துறையின் அத்துமீறலே இதற்குத் தூண்டுகோலாக அமைந்தது என்பதைக் கண்டறிந்தார். பாராளுமன்றத்திலும் தாம் கண்டறிந்த உண்மையை முன்மொழிந்தார். இதன்பின்னர் சாதிய உணர்வுடன் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் சிலர் இடமாறுதல் செய்யப்பட்டனர், என்றாலும் மதம் மாறியவர்கள் தம் நிலையில் உறுதியாக நின்றனர். இந்நாவலாசிரியரின் கூற்றுப்படி வைத்து அழகு பார்க்க முடியாத மீசைக்குப் பதிலாகத் தாடி தலையில் கட்ட முடியாத துண்டுக்குப் பதிலாகக் குல்லா, மாராப்பே போட முடியாத தாழ்த்தப்பட்ட இனத்து பெண்டிரெல்லாம் தலைமுடி முக்காடிட்டுக் கொண்டார்கள். கருப்பசாமி காதர் பாயானார். கருப்பாயி நூர்ஜகானானாள். (பக்கம் 9) பணக்கார இஸ்லாமியர்கள் வழங்கிய கொடையால் பெரிய அளவிலான பள்ளிவாசல் இங்கு கட்டப்பட்டது. பொது நீர்நிலைகளில் தண்ணீர் எடுத்துவந்த பெண்களின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் வழிமுறையாக வீடுகளில் அடிகுழாய் போடப்பட்டது. ‘மார்க்ககல்வி’ பயில இளைஞர்கள் சிலர் வாணியம்பாடிக்கு அனுப்பப்பட்டனர். பேருந்துப் பயணத்தில் தாம் அமர்ந்திருக்கும் இருக்கையை, தம்மைவிட வயதில் சிறியவனாக இருக்கும் ஆதிக்க சாதியினருக்குக் கொடுத்துவிட்டு நின்றுகொண்டு பயணம் செய்யும் அவலம் மறைந்தது. மொத்தத்தில் பண்பாட்டு ஒடுக்குமுறையிலிருந்து விடுபட மதமாற்றம் துணைபுரிந்தது. பொருளியல் நோக்கில் அல்லாமல், ஓர் எதிர்க்குரலாக அமைந்த இம்மதமாற்றம் குறித்து நாவலில் இடம்பெறும் காதர் மானத்துக்கும், ரோசத்திற்கும் மாறினோம். சோத்துலே உப்புப் போட்டு திங்கிறதை உறுதிப்படுத்தவே இந்த மாற்றம் (பக்கம் 20) என்கிறார். மீனாட்சிபுரம் தேவேந்திரகுல வேளாளர்கள் முஸ்லிம்களாக மாறியதன் வாயிலாக தம் பாதுகாப்புக்கும், சுயமரியாதைக்கும் உத்தரவாதம் செய்து கொண்டனர். இம்மதமாற்றம் நிகழ்ந்து ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில் தமிழ்ச்சமூகம் இந்நிகழ்ச்சியைப் பெரும்பாலும் மறந்துவிட்டது. தற்போது ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ என்ற இந்நாவலின் வாயிலாக எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கலை நாவலாசிரியர் அன்வர் பாலசிங்கம் வெளிக்கொணர்ந்துள்ளார். மீனாட்சிபுரத்திற்கு அருகில் உள்ள ‘கலங்காதகண்டி’ ஊரைச் சார்ந்த அன்வர் பாலசிங்கம் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமியராக மதம்மாறிய இவர் அதே ஊரில் தம்மைப்போன்றே புதிய மதம்மாறிய தம் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை மணம் முடித்துக் கொண்டவர். மீனாட்சிபுரம் பள்ளிவாசலுக்குத் தொழுகைக்கு வருபவர். மீனாட்சிபுரம் முஸ்லிம் ஜமாத்தின் உறுப்பினர்.